Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குடும்பத் தலைவிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் 

செப்டம்பர் 27, 2023 11:11

நாமக்கல்: தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள்  தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவித்தார்.

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த மகத்தான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள தகுதியுள்ள 
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், சுஜிதா திருமண மண்டபத்தில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து நேசமலர் கூறும் போது, குறைந்த வருமானமே கிடைப்பதால் சிறுசிறு கூலி வேலைக்கு சென்று வருகிறேன்.

எங்களுக்கு தினசரி வேலை கிடைப்பதில்லை. கிடைக்கின்ற வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர உத்தரவின் படி, விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது.

இது எங்களின் “உதவித் தொகை இல்லை, இது எங்களின் உரிமைத் தொகை” என பெருமிதம் கொள்கிறேன். முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி ஜான்சி ராணி கூறும் போது, என்னை போன்ற ஏழை எளியோருக்கு முதலமைச்சர் மகளிர் இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி தொகை தருகிறார்கள்.

இப்போ மாதம் 1000 ரூபாய் வழங்குவதால் எங்களோட வாழ்வதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். எங்கள போல உழைக்கும் மகளிருக்கு 1000 ரூபா வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

தலைப்புச்செய்திகள்